மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் அளித்த கால அவகாசமானது இன்றுடன் நிறைவடைகின்றது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். ஜனவரி 31-ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

திங்கட்கிழமை நிலவரப்படி 2.34 கோடி அதிகமான மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது. மொத்தமாக இதுவரை 87.44 சதவீத மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதாகவும், இதுவரை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி இருப்பதால்  மேலும் சில வாரங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்ல நாளை தெரியவரும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.