தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து இலங்கை கடல் பகுதிகளை சென்றடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருகோணமலைக்கு 350 கிலோமீட்டர் தொலைவில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நாளை காலை இலங்கை கடற்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் எனவும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீச கூடும் என்பதால் இன்று ஒரு நாள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.