சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் தொடங்கின. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட 5,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத் தொடக்கத்தில், உடல்நலக்குறைவால் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வர முடியாத நிலையில், கட்சியின் சட்ட விதிகளின்படி கே.பி. முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை,

2026 சட்டசபை தேர்தல் கூட்டணி அமைப்பு தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. கூட்டணியில் யாரை சேர்ப்பது, யாருடன் இணைவது உள்ளிட்ட விடயங்களில் இ.பி.எஸ். முழு பொறுப்புடன் முடிவு செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பெரும்பாலனவை தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் இருந்தன. முக்கியமானவை:

நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் மீட்பு, 100 நாள் வேலை 150 ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தி.மு.க. மீது கண்டனம்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் மக்களை காக்க தவறிவிட்டதாக அரசை விமர்சிக்கும் தீர்மானம்.

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு தி.மு.க. அரசு முறையான தரவுகளுடன் விண்ணப்பிக்காதது குறித்த குற்றச்சாட்டு.

“எல்லோருக்கும் எல்லாம்” என ஆசைகாட்டி, பொதுஜனங்களை ஏமாற்றி வருவதாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம்.

சிறப்பு தீவிரவாக்காளர் பட்டியலான SIR-ஐ வரவேற்ற அதிமுக பொது குழுவில் தீர்மானம்.

2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என சூளுரைத்து தீர்மானம்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம்.

டிஜிபி பதவியை கூட திமுக அரசு நிரப்ப முடியாமல் இருப்பதாகவும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை எனவும் கூறி தீர்மானம்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.