பெங்களூரைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான சித்ரா ராவ்(24) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் உங்கள் பெற்றோரை கைவிடாதீர்கள் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார். நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு சித்ரா பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்யகுமார் கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி உதவியாளர் துரை, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சித்ரா தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா வழியாக 15 நாட்களில் 4000 கிலோ மீட்டர் பயணித்து காஷ்மீரை சென்றடைவார். போகும் வழி எல்லாம் உங்கள் பெற்றோரை கைவிடாதீர்கள் என்பதை வலியுறுத்தி மக்களிடம் சித்ரா பிரச்சாரம் செய்ய உள்ளார்.