திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முல்லை நகரில் வீரபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வீரபாண்டி விடுப்பு எடுத்து ஊருக்கு வந்தார். நேற்று காலை வினோதா தனது குழந்தைகளுடன் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த வினோதா கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது அறையில் தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரபாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.