தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் லட்சுமிமேனன். இவர் சுந்தரபாண்டியன், கும்கி, வேதாளம், மிருதன் மற்றும் சந்திரமுகி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சப்தம் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை லட்சுமிமேனன் நேற்று முன்தினம் சேலம் அருகில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த திருவிழாவின்போது நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடிகை லட்சுமிமேனன் மேடையில் நடனம் ஆடினார். அப்போது கீழே இருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுப்பதற்காக மேடை நோக்கி கூட்டம் கூட்டமாக வந்ததால் பரபரப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் சில பெண்கள் மற்றும் ஆண்கள் மேடைக்கு வந்து செல்பி எடுத்தனர். இதைத்தொடர்ந்து நடிகை லட்சுமிமேனன் காவல்துறையினர் உதவியுடன் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.