சென்னை போயஸ் கார்டனில் உள்ள தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அவருடைய 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது அரசியல் நகர்வாக இருக்குமோ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சீமான், அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை தான் தம்பி செய்கிறார். இந்த கட்சி இல்லை என்றால் அந்த கட்சி என அரை நூற்றாண்டு காலமாக காலம் கடந்து விட்டது. தம்பி வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இதை எல்லாம் செய்கிறார் என்று கூறினார். அதன் பிறகு விஜய் அரசியலுக்கு வந்தால் தங்கள் ஆதரவு இருக்குமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான் என்னுடைய ஆதரவு யாருக்கும் தேவையில்லை. என்னை தம்பி தான் ஆதரிக்க வேண்டும். மேலும் எங்களுடைய கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் என்று கூறினார்.