தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. தற்போது புஷ்பா தி ரூல் என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இன்று காலை முதல் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஹவாலா பணத்தை பண பட்டுவாடா செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் அமலாக்க துறையினர் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபடுவது தெலுங்கு திரை உலகில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.