ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நசியனூர் கதிரம்பட்டி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனீஷ் (12), அரீஷ் (7) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் அரீஷ் சாணார்பாளையம் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று காலை விஜயலட்சுமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் சுனீஸ், அரீஷ், கார்த்திக்கின் தம்பி மகன் சரவணன் ஆகியோரை அழைத்துக் கொண்டு சித்தோட்டில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து 3 பேரையும் அழைத்துக் கொண்டு விஜயலட்சுமி நடந்தே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அரீஷ் தனது தாயின் கையை உதறிவிட்டு வேகமாக ஓடி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற கார் அரீஷ் மீது பயங்கரமாக மோதியது. இதனை பார்த்ததும் விஜயலட்சுமி அலறி துடித்தபடி தனது மகனை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அரீஷை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காரை ஓட்டி வந்த ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.