சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக விலையில்லா விருந்தகம் நடத்தும் தஞ்சாவூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 22 நிர்வாகிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது நடிகர் விஜய் நிர்வாகிகளை பாராட்டியதோடு மேலும் பண உதவி வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள் நான் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்ய இருப்பதாகவும் அதை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் நிர்வாகிகளிடம் விஜய் கேட்டுக் கொண்டார். சுமார் 2  மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது மேலும் சில திட்டங்கள் குறித்து நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கலந்தாலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜயிடம் நெஞ்சில் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். அதன் பிறகு நீங்கள் போட்ட ஆட்டோகிராப் என்னுடைய நெஞ்சில் பச்சை குத்தி கொள்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் நடிகர் விஜய் அது தவறு அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று ரசிகருக்கு அறிவுரை கூறியதோடு ஒரு வெள்ளை காகிதத்தில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் வழக்கம்போல் வரும் இன்னோவா காரில் வராமல் எளிமையான காரில் கூட்டத்திற்கு வந்துள்ளார். மேலும் நடிகர் விஜய் விரைவில் அரசியலில் குதிப்பதாக அடுத்தடுத்து தகவல் வெளிவரும் நிலையில் பனையூரில் ரசிகர்களை திடீரென சந்தித்து பேசியது அரசியல் வியூகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.