
ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான் பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தினரை குறி வைத்து உள்நாட்டு பலூச் விடுதலைப் படை கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தானில் அதிக பதற்றம் நிலவி வருவதால் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பாகிஸ்தானின் நகரத்தில் சில பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டை இழந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் பாகிஸ்தான் எல்லை படைத் தலைமையகம் உட்பட முக்கிய இராணுவ நிலையங்கள் அருகிலும் கண்ணி வெடித்தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடுகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பலுசிஸ்தான் தனி நாடு என்றும் அதனை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் அதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. மேலும் அதற்காக போராடுவோரை தனது ராணுவ அடக்குமுறை மூலம் கட்டுக்குள் வைத்திருந்தது.
இருப்பினும் பலுசிஸ்தான் விடுதலை படை அவ்வபோது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். தற்போது இந்திய தாக்குதலால் பாகிஸ்தான் தடுமாறி உள்ள நிலையில், அதனை பயன்படுத்தி பலூச் விடுதலை படையினரும் பாகிஸ்தான் ராணுவத்தை ஓடவிட்டு வருகின்றனர். மேலும், கிழக்குப் பகுதியில் இந்திய ராணுவப்படை தாக்குதல், தென்மேற்கு பகுதியில் பலூச் விடுதலை படை தாக்குதல் என ஒரே நேரத்தில் இரு தாக்குதலையும் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருவதாக கூறப்படுகிறது.