செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாமல்லபுரத்தில் உள்ள வெண்புருஷம் காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை முன்னாள் ஜனாதிபதிக்கு இந்தி மொழியில் சரளமாக பேசி சுற்றி காட்டி விரிவாக எடுத்து கூறி அவரை வியப்படைய வைத்துள்ளார். மேலும் மாமல்லபுரம் முழுவதும் சுற்றி பார்த்த பின், விடைபெற்று கிளம்பும்போது சுற்றுலா வழிகாட்டியான பாலகிருஷ்ணனை அழைத்து ராம்நாத் கோவிந்த் பாராட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் நேற்று இரவு 7 மணி அளவில் மாமல்லபுரத்தில் இருந்து வெண்புருஷத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்துரதம் அருகே செல்லும்போது பன்றி ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. இதனால்  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பாலகிருஷ்ணன்  நிலைதடுமாறி,  சிமெண்டு சாலையில் விழுந்து  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்ட பாலகிருஷ்ணன் சில மணிநேரத்தில் உயிரிழந்த சம்பவம் மாமல்லபுரத்தில் உள்ள சக சுற்றுலா வழிகாட்டிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் என்பவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.