ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் அபாயகரமான முறையில் காரை நிறுத்திவிட்டு ஒரு குடும்பத்தினர் சாலையோரத்திலேயே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாக வாகனங்கள் சீறிப் பாயும் விரைவுச் சாலையில், பாதுகாப்பு விதிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு அக்குடும்பத்தினர் காரின் அருகிலேயே நிழலில் அமர்ந்து நிதானமாக உணவருந்தும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயங்கும் நெடுஞ்சாலையில், இத்தகைய அலட்சியமான செயல் அவர்களது உயிருக்கு மட்டுமன்றி, அவ்வழியாக வரும் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் பேராபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இணையவாசிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட அதிநவீன நெடுஞ்சாலைகளைப் சுற்றுலாத் தளம் போலவோ அல்லது பிக்னிக் மையமாகவோ கருதி செயல்படும் இதுபோன்ற நபர்கள் மீது போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையத்தில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கெனத் தனியாக ஒதுக்கப்பட்ட ஓய்வுப் பகுதிகள் இருக்கும் நிலையில், நடுவழியில் காரை நிறுத்தி விருந்து சாப்பிடுவது போன்ற செயல்கள் அப்பட்டமான விதிமீறல் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

சாலைப் பாதுகாப்பு என்பது வெறும் சட்ட விதிகளால் மட்டுமே சாத்தியமாகிவிடாது, மாறாக ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் சுயப் பொறுப்பிலும் உணர்விலும் தான் அடங்கியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

மேலும் விரைவுச் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான அலட்சியப் போக்கு தொடர்வது பெரும் விபத்துகளுக்கே வழிவகுக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலயிக்கிள் நாட்டின் உள்கட்டமைப்பு நவீனமடைந்து வரும் வேளையில், மக்களிடையே அடிப்படை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

“>