ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் அஜய் பாண்டே என்ற இந்திய ஊழியர், அந்த நாட்டு நிறுவனங்கள் வழங்கும் மிகச்சிறந்த பணி கலாச்சாரத்தைக் கிண்டலாகப் பதிவிட்டுள்ள வீடியோ, தற்போது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானிய பணி சூழலின் சிறப்பம்சங்களை, ஒரு கஷ்டமான விஷயமாக நகைச்சுவையுடன் அவர் விமர்சித்துள்ள விதம் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வீடியோவில் அவர் கூறுகையில், “ஜப்பானில் வேலை செய்வது மிகவும் கடினம். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டும்; மீதி இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் கொடுமை நடக்கிறது. வார விடுமுறை நாட்களில் மேனேஜர் என்னை அழைப்பதே இல்லை, அதனால் எனக்கு எந்த வேலையும் இருப்பதில்லை.
வார இறுதி நாட்களை கேம்பிங் செய்வதிலும், பைக் ரைடு செல்வதிலும் நான் வீணாக்க வேண்டியுள்ளது,” என்று ஆதங்கப்பட்டார்.
மேலும், ஓவர் டைம் வேலைக்கு அந்நிறுவனம் கொடுக்கும் முறையைக் கிண்டல் செய்த அவர், “அதிக வேலை கேட்டாலும் எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. ஒருவேளை கூடுதல் நேரம் வேலை செய்தாலும், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் சரியாக ஊதியம் வழங்கி என்னைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.
தீபாவளிக்கு ஒரு பெட்டி லட்டு கூடப் பரிசாகத் தர மாட்டார்கள், அதற்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று மாதச் சம்பளத்தை போனஸாகக் கொடுத்து என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்,” என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
“>
ஜப்பானிய நிறுவனங்களின் இந்தத் ‘தொழில்முறை அராஜகத்தால்’ தான் மிகவும் விரக்தியடைந்துள்ளதாக அவர் கூறியிருப்பது, இந்திய ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்து, “இதுபோன்ற டாக்ஸிக் வேலை எனக்கு எப்போது கிடைக்கும்?” என்று பலரும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
