இந்தியாவின் கடற்கரை ஒன்றில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளைக் கண்டு வெளிநாட்டுப் பயணி ஒருவர் வெளியிட்ட ஆதங்க வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘ஜோயி டிராவல்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தான் பார்த்ததிலேயே மிகவும் அசுத்தமான கடற்கரை இதுதான் என்று அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சுத்தம் என்பது அரசாங்கத்தின் வேலை மட்டுமே கிடையாது, பொதுமக்களுக்கும் இதில் சமமான பொறுப்பு உள்ளது என்று கூறியுள்ள அவர், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்காதது பூமிக்கே செய்யும் அவமரியாதை என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
சுமார் 77,000-க்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு, இந்தியர்களிடமிருந்தே அதிக ஆதரவு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இது நம்முடைய நாட்டின் மீது வைக்கப்படும் வெறும் விமர்சனம் அல்ல, இது ஒரு கசப்பான உண்மை என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கும் மக்கள், பொது இடங்களைக் குப்பை மேடாக மாற்றுவது மாற வேண்டும் என்றும், பள்ளிப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குச் சமூகப் பொறுப்பைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசு பல திட்டங்களைக் கொண்டு வந்தாலும், மக்களின் மனநிலை மாறாத வரை முழுமையான தூய்மை சாத்தியமில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
