உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், எதிர்பாராத விதமாகப் பொதுமக்களிடம் வசமாகச் சிக்கியுள்ளார். வீட்டின் உள்ளே புகுந்த திருடனைப் பார்த்த உரிமையாளர்கள் சத்தம் போடவே, அங்கிருந்த மக்கள் உடனடியாகத் திரண்டனர். இதைப் பார்த்த திருடன் பயந்துபோய், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த வீட்டின் பிரதான கதவை தாண்டி குதித்துத் தப்பிக்க முயன்றார்.

 

ஆனால், அப்போது அந்த கதவில் இருந்த கூர்மையான இரும்பு கம்பிகள், திருடனின் கால்களைப் பலமாகப் பிடித்துக்கொண்டன. இதனால் அவரால் நகர முடியாமல் தலைகீழாகத் தொங்கும் நிலை ஏற்பட்டது. திருடன் வலியில் அலறவே, அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. திருடச் சென்ற இடத்தில் திருடனே கதவில் சிக்கிக்கொண்ட இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.