தலைநகர் டெல்லியில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்த ஒரு சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விலையுயர்ந்த கார் ஒன்றில் அமர்ந்திருந்த சிறுவன், சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது குறிவைத்துத் தண்ணீர் பலூன்களை வீசி எறிந்துள்ளான்.

வேகமாகச் செல்லும் பைக்கின் மீது தண்ணீர் பலூன் படும்போது, நிலைதடுமாறிப் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக்கூட அந்தச் சிறுவன் உணரவில்லை. அதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட நபர் இதைப் பார்த்துக் காரில் இருந்த சிறுவனின் தாயிடம் தட்டிக்கேட்டபோது, அவர் தன் மகனைக் கண்டிப்பதற்குப் பதிலாகத் ஏளனமாகச் சிரித்துக் கொண்டு அந்தச் செயலை ரசித்துள்ளார்.

​”தவறு செய்யும் பிள்ளையைத் திருத்த வேண்டிய தாயே, இப்படி விபத்தை ஊக்குவிப்பது போலச் சிரிப்பது முறையான வளர்ப்பு முறை அல்ல” என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தக் காட்சிகள் தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி, டெல்லி காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

“விளையாட்டு விபரீதமாக மாறுவதற்கு முன் இத்தகைய செயல்கள் தடுக்கப்பட வேண்டும்” என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பெற்றோர்களின் முறையற்ற வளர்ப்பு, மற்றவர்களின் உயிருக்கு எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு கசப்பான உதாரணம். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்!