மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாகப் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்தியால், இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மணிக்கணக்காகக் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில், எலக்ட்ரிக் வாகன (EV) உரிமையாளர்கள் இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி ‘கெத்து’ காட்டி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் வாசலில் கிலோமீட்டர் கணக்கில் நிற்கும் வாகன வரிசையைக் கடந்து, எவ்விதக் கவலையுமின்றித் தனது இவி ஸ்கூட்டரில் சிரித்தபடி ஒரு நபர் செல்லும் வீடியோ இப்போது எக்ஸ் (X) தளத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “நீங்க கியூல நில்லுங்க.. நான் சார்ஜ் போட்டுட்டுப் போறேன்” என்பது போன்ற அந்த நபரின் ரியாக்‌ஷன், அங்கிருந்த பெட்ரோல் வாகன ஓட்டிகளை ஒருபுறம் கடுப்பேற்றினாலும், மறுபுறம் இணையவாசிகளைச் சிரிக்க வைத்துள்ளது.

இந்தத் தட்டுப்பாடு செய்திகளுக்குப் பிறகு, கூகுள் மற்றும் யூடியூப் தளங்களில் இவி ஸ்கூட்டர்களைப் பற்றிய தேடல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. “இனிமேல் இவி வண்டி தான் காலத்தின் கட்டாயம்” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் வாகனங்களுக்கும் இவி வாகனங்களுக்கும் இடையே நடக்கும் இந்தப் போர், தற்போது இணையத்தின் ஹாட் டாபிக் (Hot Topic) ஆக மாறியுள்ளது!