உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில் உள்ள பிச்வா பகுதியில் நடந்த ஒரு சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் கணக்கு வைத்திருக்கும் ஒரு பெண், வழக்கம்போல தனது கணக்கைச் சரிபார்க்க ஏடிஎம் சென்றுள்ளார். அவர் கணக்கில் இருந்தது வெறும் 45,000 ரூபாய் மட்டுமே.

ஆனால், ஏடிஎம் ஸ்க்ரீனில் பதிவாகியிருந்த தொகையைப் பார்த்து அந்தப் பெண்ணின் மகனே மிரண்டு போனார். அங்கே இருந்தது ஏதோ ஒரு தொகை அல்ல; 9 கோடியே 99 லட்சத்து 49 ஆயிரத்து 586 ரூபாய்! நம்ப முடியாத அந்த அதிர்ச்சியைத் தங்கள் மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்து, இப்போது இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.

​இத்தனை கோடி ரூபாய் கணக்கில் வந்து கொட்டியும், அந்தப் பெண் துளியும் ஆசைப்படவில்லை. “எனக்குத் தேவையில்லாத பணம் ஒரு ரூபாய் கூட வேண்டாம்” என்று உறுதியாகச் சொல்லி, நேர்மையின் அடையாளமாகத் திகழ்கிறார். இது குறித்து வங்கி மேனேஜரிடம் கேட்டபோது, “இது சிஸ்டத்தில் ஏற்பட்ட ஒரு ‘டெக்னிக்கல் எரர்’ (Technical Error) தான்” என விளக்கமளித்துள்ளனர்.

வங்கியில் நடந்த இந்தத் தொழில்நுட்பக் குளறுபடி இப்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஒருவரின் கணக்கில் இப்படி திடீரெனக் கோடிகள் வருவது எத்தகைய பாதுகாப்பு குறைபாட்டை உணர்த்துகிறது?” என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்துள்ளன!