பிரிட்டனில் மைனர் சிறுமிகளை வலைவீசிப் பிடித்து பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யும் ‘க்ரூமிங் கேங்’ (Grooming Gang) என்ற பாலியல் வன்புணர்வுக் கும்பலின் கொடூரங்களை பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களை வாசித்துக் காட்டிய அவர், இந்த பாலியல் வன்கொடுமைகளுக்குப் பின்னால் பாதிக்கப்பட்டவர்களின் சாதி, மதம் மற்றும் இனம் மிக முக்கியக் காரணியாக இருந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை ‘ரேப் கேங் விசாரணை’ (Rape Gang Investigation) என்று குறிப்பிட்டுள்ள எம்பி ரூபர்ட் லோவ், “பாகிஸ்தானிய முஸ்லீம் ஆண்களைக் கொண்ட கும்பல்களால், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த வெள்ளையின மற்றும் கிறிஸ்தவ சிறுமிகள் மீது நடத்தப்பட்ட இந்த கூட்டு பாலியல் வன்கொடுமைகள் மிகவும் கொடூரமானவை” என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கிறிஸ்தவ சிறுமிகள் தங்களுக்குக் குறைவான மதிப்புடையவர்களாகக் காட்டப்பட்டு, சித்திரவதைகளை நியாயப்படுத்த இந்த மதரீதியான ஒப்பீடுகள் பயன்படுத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கூறிய அதிர்ச்சித் தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார். தனது நாடாளுமன்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களின் பெயர்களை நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக ரூபர்ட் லோவ் தனது எக்ஸ் (X) பதிவில் எச்சரித்துள்ளார்.

தற்போதைய அரசு நிர்வாக அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு முழுமையான நீதி கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும், இதனால் தனிப்பட்ட முறையில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு வருவதாகவும், இதில் தொடர்புடையவர்களை பிரிட்டன் நாட்டை விட்டே உடனடியாகத் துரத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.