டென்னிஸ் உலகில் வெற்றிகளை விட மனிதாபிமானமே பெரிது என்பதைத் துருக்கி வீராங்கனை ஜெயினப் சோன்மேஸ் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், கடுமையான வெப்பம் காரணமாகப் பந்து எடுத்துத் தரும் சிறுமி  ஒருவர் திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார்.

தன்னுடைய ஆட்டத்தைப் பற்றிச் சற்றும் கவலைப்படாத ஜெயினப் சோன்மேஸ், உடனடியாக ஆட்டத்தை நிறுத்திவிட்டு அந்தச் சிறுமிக்கு உதவ ஓடினார்.

அந்தச் சிறுமியைத் தனது தோளில் தாங்கிப் பிடித்து, நிழலான இடத்திற்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். சோன்மேஸின் இந்தச் செயலைக் கண்ட ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.

பின்னர் ஒரு வழியாக ஆட்டம் தொடங்கி, உலகின் 11-வது வரிசையில் இருந்த எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி சோன்மேஸ் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார்.

“ஒரு டென்னிஸ் வீரராக இருப்பதை விட, ஒரு நல்ல மனிதராக இருப்பதுதான் எனக்கு முக்கியம்” என்று அவர் கூறியது அனைவரது இதயங்களையும் வென்றுள்ளது.