உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரி மற்றும் மால்வியா காட் பகுதிகளில், அரபு நாட்டு ‘ஷேக்’ உடையில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள பூசாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, தாங்கள் துபாயைச் சேர்ந்த ஹபிபுல்லா மற்றும் ஹபிபி என்று அவர்கள் பொய் கூறியுள்ளனர். இது குறித்துப் போலீசாருக்குப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ஹரித்வாரைச் சேர்ந்த நவீன் குமார் மற்றும் பிரின்ஸ் என்பதும், தங்களது யூடியூப் சேனலுக்காக இதுபோன்று வேடமிட்டு வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அந்த இளைஞர்கள் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, போலீசார் அவர்களை விடுவித்தனர்.

ஹரித்வார் கும்பமேளா பகுதிகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

குறிப்பாக, 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளாவுக்கு முன்னதாக, இந்தப் பகுதிகளைப் புனிதமான தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கங்கா சபா அமைப்பு வலியுறுத்தி வருகிறது.