கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த மாணவர் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தனது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர் கவியரசன் (17), கடந்த டிசம்பர் 4ஆம் தேதி பிளஸ் ஒன் மாணவர்களால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்து, டிசம்பர் 7ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பட்டீஸ்வரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, பிளஸ் 1 மாணவர்கள் 15 பேரை டிசம்பர் 5ஆம் தேதி கைது செய்து, தஞ்சாவூர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 8ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்ட பிறகு, டிசம்பர் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி பள்ளிக்கு நேரடியாக வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களிடம் வகுப்புகள் முறையாக நடக்கிறதா, ஏதேனும் மன அழுத்தம் உள்ளதா, பிற மாணவர்களால் தொந்தரவு உள்ளதா என்பது குறித்துக் கேட்டறிந்தார்.