உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உணவகம் மீது மோதிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகரின் புகர்ஜி பகுதியில் நடந்த இந்த விபத்தில், உணவகத்தின் மீது மோதிய பிறகு கார் ஒரு கணம் நின்றது. இருப்பினும், தாபா ஊழியர்கள் ஓடி வந்து ஓட்டுநரைத் தடுக்க முயன்றபோது, கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் மீண்டும் அங்கிருந்து தப்பிச் சென்றது.

 

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்துக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, முசாபர்நகர் காவல்துறையினர் இந்தச் சம்பவத்தை அறிந்தவுடன், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையே, முசாபர்நகரின் சர்தாவல் பகுதியில் நடந்த மற்றொரு சாலை விபத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.