உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், ‘112’ என்ற காவலர் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்ற காவலர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்ததில், வாகனம் பள்ளத்தில் விழுந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. ரோந்துப் பணியில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும், அப்போது இரண்டு காவலர்களும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான வாகனத்தை பள்ளத்தில் இருந்து வெளியே எடுக்க ஒரு கிரேன் அழைக்கப்பட்டது. வாகனத்தை மீட்கும் பணி முடிந்த பிறகு, கிரேன் ஓட்டுநர் கூலிக் கேட்டபோது, மனோஜ் மற்றும் கிருஷ்ணா என்று அடையாளம் காணப்பட்ட அந்தக் காவலர்கள் இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர்.

காவலர்கள் கிரேன் ஓட்டுநரைத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து, அலிகார் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் ஜாடூன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். விபத்தில் ஈடுபட்ட அந்தக் ‘குடிபோதை’ காவலர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அலிகார் காவல்துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

மேலும், சுல்தான்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிவ்கர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு உதவி ஆய்வாளர், பணியின்போது அதிகப்படியான குடிபோதையில் இருந்ததால், உள்ளூர் மக்களுடன் சண்டையிட்டு ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற சம்பவமும் முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.