சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஒரு பெண், தன் திருமணத்தை ரத்து செய்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். கடந்த ஜனவரி மாதத்தில், ஒரு மேட்ரிமோனி ஏஜென்ட் மூலம் அவர் ஒரு ஆணுடன் திருமணத்திற்காக நிச்சயம் செய்து கொண்டார். திருமணம் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக ஹோட்டல் புக் செய்தல், அழைப்பிதழ்கள் அச்சிடுதல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மொத்தம் 2 லட்சம் யுவான் (சுமார் 23 லட்சம் இந்திய ரூபாய்) பெண்ணின் குடும்பத்துக்கு ஆணின் குடும்பம் கொடுத்திருந்தது.

ஆனால் திருமணத்துக்கு சில வாரங்களே இருந்த நிலையில், பெண் உறவை முறித்துக் கொண்டார். காரணம்: ஆணின் வருமானம் குறைவு மற்றும் அவர் “அதிக நேர்மையானவர்” என்று கூறினார். திருமணம் ரத்தான பிறகு, பெண் 1.7 லட்சம் யுவான் (சுமார் 20 லட்சம் ரூபாய்) திரும்ப கொடுத்தார். ஆனால் மீதமுள்ள 30,000 யுவான் (சுமார் 3.5 லட்சம் ரூபாய்) திரும்பத் தர மறுத்தார். அதை “ஹக்கிங் ஃபீ” (அணைப்பு கட்டணம்) என்று அழைத்தார்.

திருமணத்துக்கு முன் நடந்த போட்டோஷூட்டில், போட்டோகிராஃபர் ஆணை லேசாக அணைக்கச் சொன்னார், அதற்கு இந்த கட்டணம் என்று கூறினார். மேலும் சில செலவுகளையும் சேர்த்து கோரினார். இந்த செய்தி சீன சமூக வலைதளமான வீபோவில் வைரலாகி, 2.3 கோடி பார்வைகளைப் பெற்றது. பலர் இதை பணம் பறிக்கும் தந்திரம் என்று விமர்சித்தனர். சிலர் பெண்ணை ஆதரித்தும் கருத்து தெரிவித்தனர்.