ராஜஸ்தானின் குசாமன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஸ்டேஷன் சாலையில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வியாபாரி ரமேஷ் ருலானியா (40) மீது முகமூடி அணிந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த கொலை முழுவதும் ஜிம்மில் உள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் பகுதி மக்களிடம் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரமேஷ் ருலானியா குசாமனில் பைக் ஷோரூம் மற்றும் ஹோட்டல் வைத்திருந்தவர். அவரை சுட்டுக் கொன்றவர் காலை 5.20 மணிக்கு ஜிம்முக்குள் நுழைந்து, ரமேஷை குறிவைத்து சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையின் பின்னணியில் ரோஹித் கோடாரா கும்பல் இருப்பது உறுதியாகியுள்ளது. அவருடைய கும்பலின் உறுப்பினர் வீரந்தர் சரண், தொழிலதிபர் மிரட்டி பணம் பறிக்கும் அழைப்பின் போது தங்களை திட்டியதாக கூறினார்.

“நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு போன் செய்தோம். அவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி, எங்களுக்கு ரூ.100 கூட கொடுக்க மாட்டேன் என்று சமூக ஊடகங்களில் கூறினார். நாங்க யாரையும் மறக்க மாட்டோம். இது அதுக்கான பதிலடி!” என ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

வீடியோ வெளியான பின்னர், அந்த பகுதியில் உள்ள பல வியாபாரிகளும், ரோஹித் கோடாரா கும்பலிடமிருந்து இதேபோன்ற மிரட்டல்கள் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது போலீசார் இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரோஹித் கோடாரா தற்போது போர்ச்சுகல்லில் இருப்பதாகவும், டெல்லி வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்கு ராஜஸ்தானில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் இந்த கும்பலின் தாக்குதலால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரிய அளவில் பதட்டம் நிலவுகிறது.