நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கர்நாடகா, அரியானா, மராட்டிய மாநில தேர்தல்களில் பா.ஜனதா கட்சி வாக்குகளை திருடியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டிய நிலையில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் கூறியதால், எதிர்க்கட்சிகள் அதிரடியாக போராடி வருகின்றன.

இதுகுறித்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து, “வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களே வாக்களித்துள்ளனர். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்பை அவமதிக்கின்றன. தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சுவதில்லை, எதிர்க்கட்சியோ ஆளும் கட்சியோ எங்களிடம் வேறுபாடு கிடையாது” என்று கூறினார். மேலும், “வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?” என்ற கேள்வியும் எழுப்பினார்.

தேர்தல் ஆணையரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக பெண்கள் வாக்களிக்கும் போது சிசிடிவி வீடியோ வெளியிட வேண்டும் என்ற கேள்வி கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இதனை அரசியல் வட்டாரத்துடன் பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.

“>

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளப்பதிவில், “அந்த சிசிடிவி கேமராக்களை வைக்கும் முன் பெண்களிடம் அனுமதி கேட்டீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை அல்ல. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவையில்லை. வெளிப்படைத் தன்மையே தேவை” என்று பதிவு செய்து தேர்தல் ஆணையரின் பேச்சுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். இதனால், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டைச் சுற்றிய சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.