மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ‘டயல் 112’ அவசர உதவிப் பிரிவு போலீஸ் வாகனத்தில் இருந்த காவலர்கள் சிலர்,  ஒருவரை நடுரோட்டில் தள்ளி அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ‘மங்கள் லோதி’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாலையில் நின்றுகொண்டிருந்த அவரிடம் போலீசார், மொபைல் போனை திடீரென பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த மங்கள் லோதி, போலீஸ் வாகனத்தின் ஜன்னல் வழியாகத் தனது மொபைல் போனை திரும்பத் தருமாறு தொடர்ந்து கெஞ்சிக் கேட்டுள்ளார். ஆனால், போனைத் தராமல் ஆத்திரமடைந்த ஒரு காவலர், வாகனத்திற்கு உள்ளே இருந்தபடியே மங்கள் லோதியின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.

 

அதோடு நிறுத்தாமல், வாகனத்தில் இருந்து வெளியே இறங்கி வந்த அந்த காவலர், மங்கள் லோதியை நடுரோட்டில் தள்ளிவிட்டு, தனது நெஞ்சை நிமிர்த்தி அவரை அச்சுறுத்தும் வகையில் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது, “தயவுசெய்து என் போனை மட்டும் திருப்பித் தந்துவிடுங்கள்” என்று மங்கள் லோதி தொடர்ந்து போலீசாரிடம் முறையிடுவது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, பொதுமக்களிடம் அளவுக்கு அதிகமான அதிகார பலத்தைப் பிரயோகித்த போலீசார் மீது நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேச காவல்துறையின் சார்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்த தகவலோ வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.