குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலேஷ் பவேஷ்பாய் வாக்மாஷி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத், சூரத் நகரில் உள்ள பூணா படியா மார்க்கெட்டில் நிலேஷ் பவேஷ்பாய் என்பவர் நின்று கொண்டிருந்தார்.

அவர் தேநீர் கடைக்கு முன்பாக தனது பைக்கில் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையில் சென்ற லாரியின் பின்புற சக்கரத்தின் கீழே தானாக ஓடி சென்று விழுந்துவிட்டார். அதனை கண்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை காப்பாற்ற முயற்சி செய்த நிலையில், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நிலேஷ் அம்ரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த சில வருடங்களாக தனது சகோதரருடன் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதில் அவரது கைபேசியை கைப்பற்றிய நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று முன்பாக தனது சகோதரியின் மாமாவிற்கு “மாமா வாங்க” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.