உத்தரப்பிரதேச டி20 லீக் தொடரில் மெரட் மேவரிக்ஸ் அணிக்காக விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி, தனது மிரட்டலான வேகத்தால் ஸ்டம்பை இரண்டாகப் பிளந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நடப்பு யு.பி. டி20 லீக் தொடரில் நடைபெற்ற ஒரு முக்கியமான ஆட்டத்தில், மெரட் மேவரிக்ஸ் மற்றும் நொய்டா கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகி தனது அசுர வேகத்தை வெளிப்படுத்தினார்.

தொடக்க வீரரான சளூர்யா சிங்  தியாகியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தற்காப்பு ஆட்டத்தில்  ஈடுபட்டார். ஆனால், தியாகி வீசிய ஒரு அனல் பறக்கும் வேகமான பந்து, பேட்ஸ்மேனின் கணிப்பைத் தாண்டி நேராக வந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. அந்த வேகத்தில் ஸ்டம்ப் இரண்டாக உடைந்து தூக்கி வீசப்பட்டது. இந்தப் பந்துவீச்சு தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

 

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மெரட் மேவரிக்ஸ் அணி, நொய்டா கிங்ஸ் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் வெறும் 116 ரன்களுக்குச் சுருண்டது. எளிய இலக்கை நோக்கி ஆடிய நொய்டா கிங்ஸ் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பந்துவீச்சில் மிரட்டிய கார்த்திக் தியாகி வெறும் 3 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் நொய்டா கிங்ஸ் அணி 11-வது ஓவரில் 51 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் மழை குறுக்கிட்டதால், டி.எல்.எஸ் முறைப்படி மெரட் மேவரிக்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடர் முழுவதும் கார்த்திக் தியாகி தனது ஆதிமுகத்தைக் கொடிக்கட்டிப் பறக்கவிட்டு வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். முன்னாள் யு-19 உலகக்கோப்பை ஸ்டாரான தியாகியின் இந்தத் தொடர்ச்சியான திறமையான பந்துவீச்சு, ஐ.பி.எல் உள்ளிட்ட எதிர்வரும் தொடர்களில் அவரது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.