கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன், சடலத்தின் அருகே தூங்கி கிடந்தது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பவிதா என்ற பெண்ணுக்கும், டார்வின் என்ற நபருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பவிதா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். டார்வின் ‘வீட்டோடு மாப்பிள்ளை’ என்பதால், அவருக்குக் குடும்பத்தினரிடையே மரியாதை குறைவாக இருந்ததாம். இது காரணமாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, பவிதா–டார்வின் தம்பதியரின் இரண்டு பிள்ளைகளும் தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இருவருக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, “வீட்டோடு மாப்பிள்ளையான உனக்கெல்லாம் என்ன மரியாதை?” என மனைவி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டார்வின், தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
கொலை செய்த பின், சடலத்தை எங்கு மறைக்கலாம் என யோசித்த டார்வின், கடைசியாக சடலத்தின் அருகே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை, வீடு திறக்கப்படாததை கவனித்த அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டினர். பின்னர் உள்ளே பார்த்த அவர்கள், சடலத்தையும், அருகில் தூங்கிக்கொண்டிருந்த டார்வினையும் பார்த்து அதிர்ச்சியில் கத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கருங்கல் காவல்துறை, சம்பவ இடத்துக்குச் சென்று பவிதாவின் உடலை கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் டார்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம், “வீட்டோடு மாப்பிள்ளை” என்ற வார்த்தையால் உருவான கோபம், ஒரு குடும்பத்தை முற்றிலும் சீரழித்துவிட்டது எனக் கூறும் வகையில் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.