ஹைதராபாத்தில் கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டில் திருநங்கை பெண்ணான  போகலா என்பவர் விஸ்வநாதன் கிருஷ்ணமூர்த்தி என்ற நபரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் ஆரிய சமாஜ் மந்திரில் நடைபெற்றது. அவரது திருமணத்தின் போது போகலாவின் வீட்டில் வரதட்சணையாக ரூபாய் 10 லட்சம், 25 சவரன் தங்கம், 500 கிராம் வெள்ளி மற்றும் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வழங்கியுள்ளனர்.

அந்த திருமணம் முடிந்த சில நாட்களிலேயே விஸ்வநாதன் போகலாவை விட்டு பிரிந்து சென்றதாகவும், பின்னர் தொடர்ந்து ஆபாச செய்திகளை அனுப்பி மிரட்டி வருவதாகவும் போகலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் விஸ்வநாதன் மீது வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இந்நிலையில் விஸ்வநாதன் தரப்பில் திருநங்கைகளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் அவர்களை பெண்ணாக கருத முடியாது எனவும், அதனால் பிரிவு 498A என்ற வழக்கின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பை திருநங்கைகளுக்கு வழங்கக் கூடாது எனவும் வாதாடப்பட்டது.

அதனால் கோபமடைந்த நீதிபதி, வெறும் இனப்பெருக்கத்திறனை அடிப்படையாகக் கொண்டு பெண்களை மதிப்பிடும் குறுகிய பார்வையை கண்டித்தார்.

மேலும் ஒருவரின் பாலின அடையாளத்தை பொறுப்பெடுத்தாமல், அனைத்து நபர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கண்ணியம், அடையாளம் மற்றும் சமத்துவத்தை நிலை நிறுத்தும் உணர்வை குறைத்து மதிப்பிடுவதற்கு சமம் என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

பின்னர் அந்த வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதி, பெண்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு வன்முறை சட்டம் போன்ற அனைத்து சட்டங்களின் கீழ் உள்ள பாதுகாப்புகளும் இனி திருநங்கைகளுக்கும், பெண்களுக்கும் பொருந்தும் என வலியுறுத்தினார்.

இருப்பினும் போகலா அளித்த புகாரில் குறிப்பிட்ட ஆதாரங்கள் இல்லாததால், அவரது கணவர் விஸ்வநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை நீதிபதி ரத்து செய்து தீர்ப்பளித்தார்.