கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியில் திம்மப்பா (52) – ஜெயந்தி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஜெயந்தி தற்போது கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அவருக்கு வரும் ஜூலை மாதம் 2 ம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திம்மப்பா முடிவு செய்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சம்பவ நாளில் திம்மப்பாவிடம் ஜெயந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் தகராறாக முற்றிய நிலையில் கோபமடைந்த திம்மப்பா ஜெயந்தியின் கழுத்தை நெறித்த போது மூச்சு திணறிய ஜெயந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனை கண்டு பதட்டமடைந்த திம்மப்பா என்ன செய்வது என்று தெரியாமல் சமையல் அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கணவன் மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.