அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன். தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி ஒன்றில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடும் போக்கை அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் அடிப்படைப் பாதுகாப்பைக் கூட உறுதி செய்யாதது வேதனை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடும் தவெக அரசு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலைச் சிற்றுண்டியில் பல்லி விழுந்ததால், அதை உட்கொண்ட 11 பள்ளி மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட… https://t.co/HMS3tvoYFU pic.twitter.com/dzJBMoc5ee
— Nainar Nagenthran (@NainarBJP) June 8, 2026
பள்ளிகளில் இதுபோன்ற அலட்சியப் போக்குகள் தொடர்வது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனக் கவலை தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக அரசு இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படாமல் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதோடு, சமையல் கூடங்களின் தூய்மையைக் கண்காணித்து இனி வரும் காலங்களில் இதுபோன்ற தரமற்ற, ஆபத்தான சம்பவங்கள் நிகழாத வண்ணம் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்
