ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். தவெக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்குச் சரியாகச் சென்றடைகிறதா என்பதைக் கண்காணிக்கும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளி வார்டுகள் மற்றும் மருந்துப் பெட்டகம் ஆகிய இடங்களைப் பார்வையிட்ட அமைச்சர், அங்கு நிலவிய குறைபாடுகள் மற்றும் சுகாதாரமற்ற சூழலைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தார்.

பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்த அமைச்சர், பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை அளிப்பதில் எந்தவித மெத்தனப் போக்கும் இருக்கக் கூடாது என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துப் பணிமனையிலும் ஆய்வு செய்த அவர், பேருந்துகளின் தரம் மற்றும் ஊழியர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அமைச்சரின் இந்த அதிரடி “டோஸ்” மற்றும் அதிரடி நடவடிக்கைகள் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதே வேளையில், பொதுமக்களின் தரப்பிலிருந்து பாராட்டுக்களையும் “சபாஷ்”களையும் பெற்றுள்ளது.