டேராடூனில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு விதமுறைகளை மீறியதாக மாணவர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவனின் தந்தையும், காவல்துறை சப்-இன்ஸ்பெக்டருமான நபர், மறுநாளே கல்லூரிக்குள் புகுந்து அங்கிருந்த ஆசிரியர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். கல்லூரி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மகன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் இரு தரப்பிலிருந்தும் பரஸ்பர புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதால், உண்மை நிலவரத்தைக் கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.