விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் 107 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட அரசாணை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளி திறக்க உள்ள நிலையில் ஜாதி சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த சிரமமும் இல்லாமல் ஒரு வாரத்திற்குள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ சேவை மையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவியர் சான்றிதழ்களை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்தால் தேவையான உதவிகள் செய்து தரப்படும். இ சேவை மையத்தில் மாணவ மாணவியர் சான்றிதழ் பெற முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்