
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் . 2024-25 முதல் 2028-29 வரை தகுதியான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 2025 மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். டிஜிட்டல் தளத்திலும் இதற்கான வசதி உள்ளது. இனி ஆவாஸ் பிளஸ் மொபைல் ஆப் மூலமாகவும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தகுதியான குடும்பங்களின் பெயர்கள் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி செயலாளர் அல்லது வேலைவாய்ப்பு உதவியாளர் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தை சேர்ந்த வீடில்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தவும், டிஜிட்டல் மையமாக்கவும் செயலி தொடங்கப்பட்டது. இதை அனைவரும் தங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒரு செல்போனில் இருந்து ஒரு கணக்கெடுப்பு மட்டுமே நடத்த முடியும். விண்ணப்பதாரர் விண்ணப்பத்திற்கு ஆதார் அட்டை பயன்படுத்துவது கட்டாயம். இந்த டிஜிட்டல் முன்முயற்சி ஆனது திட்டத்தை மிகவும் வெளிப்படையானதாக அணுகக் கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலமாக கிராமப்புற பயனாளர்கள் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். நல்ல வீடு இல்லாதவர்கள் மட்டுமே திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். மூன்று சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்கள் தகுதி பெற மாட்டார்கள்.
ஒரு விவசாயியின் கிரெடிட் கார்டு வரம்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர் அந்த திட்டத்தின் பலனை பெற முடியாது. இரண்டரை ஏக்கர் அல்லது அதற்கு மேல் பாசன நிலம் உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தில் பலன் கிடையாது. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் அரசு வேலையில் இருந்தாலும் அல்லது வருமான வரி, வணிகவரி செலுத்தினாலும் அவரும் தகுதியற்றவராக கருதப்படுவார்.