தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செலவினத்தை மேற்கொள்வதற்கு கூடுதல் நிதி 11 கோடியே 97 லட்சத்திற்கு நிர்வாக அனுமதியும் நடப்பு ஆண்டுக்கு மீதமுள்ள நான்கு மாதங்களுக்கு மட்டும் மூன்று கோடியே 99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த திட்டம் ஒரு தொடர் செலவினம் என்பதால் அடுத்த ஆண்டுக்கும் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் மாற்று திறனுடைய பள்ளி வயதில் உள்ள அனைத்து மாணவர்களையும் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து அவர்களின் மாற்றுத்திறன் தன்மையை பொறுத்து அவர்களுக்கான சிறப்பு கல்வி, சிகிச்சை மற்றும் பயிற்சிகள் சிறப்பு பயிற்றுனர்களால் ஆயத்த பயிற்சி மையங்களில் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.