கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேசுவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது புத்தக அலமாரியில் தேடிக்கொண்டிருப்பதாகவும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடிக்கு பின் நீண்ட நாள் ஒளிந்து கொண்டிருக்க முடியாது என்றும், அந்த ஆடு காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த அறிக்கை தனக்கு பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவதூறு பரப்பும் வகையிலும்  உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மான நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தன்னைப் பற்றி இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அவ்வாறு பேசியதற்காக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை கடந்த முறை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி அவர்களை இணைத்து பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்டு வழக்கினுடைய விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில், இபிஎஸ்ஐ தொடர்பு படுத்தி பேசுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.