தேனி மாவட்டத்திலுள்ள சோலைதேவன் பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது பக்கத்து வீட்டில் முருகன் என்பவர் வசித்து வந்தார். அவர் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். அவரது வீட்டிற்கு கடந்த 2018-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வந்தார்.

இதனையடுத்து ராஜேந்திரன் ஜோதிடம் பார்த்துவிட்டு எனது வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டார். நான் தண்ணீர் கொடுத்த போது எனது குடும்பத்தை பற்றி விசாரித்தார். அப்போது எனது இரண்டு மகன்களும் பட்டப்படிப்பு படித்து விட்டதாகவும் வேலை தேடி வருவதாகவும் தெரிவித்தேன். அவர் சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளை எனக்கு தெரியும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவேன் என கூறினார்.

இதனை நம்பி அவரிடம் எனது இரண்டு மகன்களுக்கும் வேலை வாங்கித் தர 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டார். மோசடி செய்த ராஜேந்திரனுக்கு ராஜாராம் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கையை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.