நீட் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் ‘சி.ஜே.பி’ (CJP) என்ற அமைப்பின் கீழ் மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மிசோரம் மாநிலத்தில் நடந்த ஒரு போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்துள்ளது. அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், வழக்கமான போராட்டங்களைப் போல ஆக்ரோஷமாகக் கோஷம் எழுப்பாமல் முற்றிலும் மாறுபட்ட வழியைக் கையாண்டனர்.

கொளுத்தும் வெயிலில் குடைகளைப் பிடித்தபடி நின்றிருந்த மாணவர்கள், திடீரென பாலிவுட்டின் புகழ்பெற்ற ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை ஒன்று சேர்ந்து பாடத் தொடங்கினர். எந்தவித சத்தமோ, வன்முறையோ இல்லாமல் ஒட்டுமொத்த கூட்டமும் ஒரே குரலில் பாடியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. பாடல் முடிந்ததும் அனைவரும் கைதட்டி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

இந்த நெகிழ்ச்சியான காட்சியை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இது ஏதோ பாட்டுக் கச்சேரி அல்ல; அநீதியைக் கண்டு மௌனமாக இருக்க மறுக்கும் மக்களின் குரல். சில புரட்சிகள் கோஷங்களால் நடக்கும், எங்கள் புரட்சி பாடலால் நடக்கிறது” என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. மொழி, இனம், அரசியல் என அனைத்தையும் கடந்து, மாணவர்களின் கல்வி எதிர்காலத்திற்காக இளைஞர்கள் காட்டிய இந்த ஒற்றுமைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சண்டையோ, வன்முறையோ இல்லாமல் தங்களின் கோரிக்கையை உலகிற்கு உரக்கச் சொன்ன இந்த அமைதிப் போராட்டம், தற்போதைய மாணவர் இயக்கத்தின் மிக முக்கிய அடையாளமாக மாறியுள்ளது.