விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகளுடன் முன்னாள் கவுன்சிலர் பேரூராட்சி அலுவலகம் வந்து கோரிக்கையை முன் வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் சுண்ணாம்பு காளவாய் தெருவில் வசித்து வரும் முன்னாள் கவுன்சிலர் வீரமணி தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் நாய்குட்டிகளுக்கு விஷம் கொடுத்துள்ளனர். இதனால் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது நாய்க்குட்டிகளுக்கு மருத்துவ சிகிச்சை தந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் ஒரு நாய்க்குட்டி இறந்து விட மற்ற இரண்டு நாய்களும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனால் வீரமணி பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று முன் தினம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய் குட்டிகள் மற்றும் கொல்லப்பட்ட நாய்க்குட்டி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு வந்தார்.

பின் நுழைவு வாசலில் நாய் குட்டிகளை வைத்தார். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் இது குறித்து கேட்டறிந்தார்கள். அப்போது வீரமணி, பன்றிகள் வளர்ப்பவர்கள் தான் எனது நாய்க்குட்டிகளுக்கு விஷம் வைத்து கொன்று விட்டனர். ஏற்கனவே எனது இரண்டு நாய்க்குட்டிகள் இறந்த நிலையில் தற்போது மூன்று நாய்க்குட்டிகளுக்கும் விஷம் கொடுத்துள்ளனர். ஆகையால் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் வீரமணி தனது நாய் குட்டிகளுடன் அங்கிருந்து கிளம்பினார். மேலும் 2 நாய்களும் பரிதாபமாக உயிரிழந்தது.