இந்தியாவில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி விதிகளில் அரசு பல சீர்திருத்தங்களைச் செய்து, பணத்தை எடுப்பதை எளிதாக்கி வரும் நிலையிலும், ஒரு கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தரவுகளின்படி, சுமார் 30.91 லட்சம் செயலற்ற EPF கணக்குகளில் சுமார் 9,330 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேமிப்புத் தொகை இன்னும் உரிமை கோரப்படாமல் அப்படியே உள்ளது.
ஏறக்குறைய எட்டு கோடி சந்தாதாரர்கள் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், ஓய்வூதியச் சேமிப்பின் பெரும் பகுதி இன்னும் முடக்கப்பட்டுள்ளது என்பது இந்தத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த செயலற்ற கணக்குகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முழுமையான விவரங்களை வழங்கவில்லை. கடந்த 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கான தரவுகளை மட்டுமே வழங்கிய அந்த நிறுவனம், அதற்கும் முந்தைய ஆண்டுகளுக்கான பதிவுகள் பராமரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும், தனிநபர் அடையாள எண்களுடன் உதாரணமாக, இணைக்கப்பட்ட கணக்குகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்த விவரங்களைப் பகிரவும் நிறுவனம் மறுத்துவிட்டது. இந்தச் சிக்கலால், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதியச் சேமிப்புத் தொகை நீண்ட காலமாக யாருக்கும் சேராமல் முடங்கிக் கிடப்பது வருத்தமளிக்கும் ஒன்றாக உள்ளது.
