திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன் சிங்காரவேலன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்த பேருந்தை லொகேஷன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெப்பாலம்பட்டி பகுதியில் சென்றபோது டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராஜேஸ்வரி, சதீஷ், லோகேஷ் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.