நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிழிஞ்செடா எம்.ஜி.ஆர் காலனி பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டேவிட் ஜான்(15) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் டேவிட் ஜான், தர்ஷன்(15), குணா(15), கதிரேசன்(15) ஆகிய நான்கு பேரும் சேலஸ் பகுதியில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவர்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதற்கிடையே மாயமான ஒரு மாணவனின் வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எங்கள் பெற்றோர்கள் ஒழுங்காக படிக்க வேண்டுமென கூறி அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர். அவர்கள் எங்களை திட்டி அடிக்கவும் செய்கின்றனர். எங்களுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை.

இதனால் நாங்கள் 4 பேரும் வீட்டை விட்டு வெளியேறுகிறோம். எங்களை தேட வேண்டாம். மேலும் போலீசாரிடம் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நான்கு மாணவர்களும் சேலாஸ் பகுதியில் சுற்றி திரிந்ததும், ஒரு பேருந்தில் ஏறி வெளியூர் சென்றதும் தெரியவந்தது. அந்த மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.