திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்னாங்கூர் கிராமத்தில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அக்கா தங்கையான முனியம்மாள் (65) மற்றும் ருக்மணி (61) ஆகியோரை திருமணம் செய்துள்ளார். இதில் முனியம்மாளுக்கு 2 மகன்களும், ருக்மணிக்கு 1 மகனும் இருக்கும் நிலையில் முனியம்மாளின் இரு மகன்களுக்கும் திருமணம் ஆகி அவர்கள் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் முனியம்மாள் தன் மகனுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் 35 வயதாகும் ருக்மணியின் மகனின் சுரேஷுக்கு இன்னும் திருமணம் ஆகாததால் அடிக்கடி மது அருந்திவிட்டு திருமணம் செய்து வைக்க தன் தாயாரிடம் தகறாறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முனியம்மாள் சென்னையில் இருந்து வந்த நிலையில் இரவில் சுரேஷ் மது போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அவர் வீட்டிற்கு பணம் எதுவும் கொடுக்காத நிலையில் தன் தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததோடு திருமணம் செய்து வைக்குமாறும் கூறியுள்ளார்.

அதோடு முனியம்மாளிடமும் அவர் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் முனியம்மாள் கொதிக்கும் வெந்நீரை சுரேஷ் மீது ஊற்றியுள்ளார். இருப்பினும் சுரேஷ் தொடர்ந்து அவர்களை தொந்தரவு செய்ததால்  ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து சுரேஷை கட்டையால் அடித்தும், கல்லால் அடித்தும் கொடூரமாகக் கொன்றனர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வந்தவாசி வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முனியம்மாள் மற்றும் ருக்மணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.