கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடிகரை பகுதியில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கநாயகி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் நைஜீரியா நாட்டில் மோட்டார் பம்ப் உற்பத்தி உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். அவ்வபோது வெளிநாட்டில் இருந்து ரங்கநாயகியின் மகன் அவரது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் ரங்கநாயகியின் சகோதரர் பாலகிருஷ்ணன், அவரது மகள் கவிப்பிரியா, கணவர் ஆனந்தகுமார் ஆகியோர் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி இதுவரை 8 கோடி ரூபாய் வரை ரங்கநாயகியிடம் பணம் வாங்கியுள்ளனர். அவர்கள் லாபத்தொகை எதுவும் கொடுக்கவில்லை.

இதுகுறித்து ரங்கநாயகி தொடர்ந்து கேட்டதால் ஆறு கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள 2 கோடியே 10 லட்ச ரூபாய் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாலகிருஷ்ணன், கவிப்பிரியா, ஆனந்தகுமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்,2 லட்ச ரூபாய் பணம் வாங்கியவற்றை பறிமுதல் செய்தனர்.