கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிபுதூர் அருகே சூர்யா நகரில் 16 வயது பள்ளி மாணவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடன் படிக்கும் மாணவியை மாணவர் காதலித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின் அண்ணன் அந்த மாணவரை அழைத்து கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவன் காதலை கைவிடவில்லை. இது தொடர்பாக அந்த மாணவனுக்கும், மாணவியின் அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் மாணவன் தனது நண்பருடன் கலந்து கொண்டார். அப்போது மாணவியின் அண்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் காயமடைந்த மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.